யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் வெளியிடவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாமனிதன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது
இந்த விழா திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடக நண்பர்கள் மற்றும் திரையுலக ஆளுமைகள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய படத்தின் நாயகனான விஜய் சேதுபதி, “யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திருக்காது. நான் இளையராஜாவின் தீவிர ரசிகன். அவருடைய இசையில் இருந்து கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. இயக்குநர் சீனு ராமசாமி மனிதாபிமானத்தை மையப்படுத்தி படம் எடுக்க கூடியவர். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்…” என்றார்.
படத்தின் இயக்குநரான சீனு ராமசாமி பேசும்போது, “தற்போது நல்ல விஷயங்கள் நடப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களின் விமர்சனங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள மனம் திறந்து காத்திருக்கிறேன். படத்தின் OTT உரிமையை வாங்கிய அல்லு அரவிந்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டினார். யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இந்தப் படம் குழந்தை போல. யுவன், விஜய் சேதுபதி இல்லாமல் இந்தப் படம் நடந்திருக்காது. முழு ஈடுபாட்டுடன் இப்படத்தை தொடங்கினேன். இளையராஜாவுக்கு அர்ப்பணிக்கும்விதமாக இப்படம், இளையராஜா பிறந்த ஊரான தேனி, பண்ணைப்புரத்தில் படமாக்கப்பட்டுள்ளது…” என்றார்.
படத்தின் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா பேசும்போது,”இந்தப் படம் வெளியாவதில் பல சிக்கல்களும், சந்தேகங்களும் இருந்தன. ஆர்.கே.சுரேஷ் படத்தைப் பார்த்துவிட்டு தனக்கு மிகவும் பிடித்ததாக கூறியதாக இயக்குநர் சீனு ராமசாமி என்னிடம் தெரிவித்தார். குழப்பமான ஒரு சூழ்நிலையில் இருந்தபோது, இது ஒரு நேர்மறையான உணர்வைக் கொடுத்தது.
நானும் சீனு ராமசாமியும் ஒன்றாக பல முறை பணியாற்றியுள்ளோம். அவர் ஒரு அருமையான இயக்குநர். நான் விஜய் சேதுபதியை அணுகியபோது அவர் டேட் இல்லை என்று கூறினார். நானும் என் அப்பாவும் படத்திற்கு ஒன்றாக இசையமைப்போம் என்று சொல்லி அவரை சம்மதிக்க வைத்தேன். இந்தப் படத்தில் என் தந்தையுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன், படத்தை நான் தயாரிப்பதால்தான் இது சாத்தியமானது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.
தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, “இயக்குநர் பாலுமகேந்திராவுக்குப் பிறகு மனித உணர்வுகளை அப்படியே படம் பிடிக்கும் சம கால இயக்குநர்களில் சீனு ராமசாமி முக்கியமானவர். எங்கள் இருவரின் நட்புதான் ‘தர்மதுரை’ படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தது.
மக்கள் மனதில் ரஜினிகாந்த் மட்டுமே அடைந்துள்ள இடத்தை விஜய் சேதுபதி கூடிய விரைவில் பிடிப்பார். சீனு ராமசாமி எப்போதும் விஜய் சேதுபதியிடம் இருந்து சிறந்ததையே பெறுவார். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..” என்றார்.