விருதுநகரில் நேற்று 3 திரையரங்குகளில் நடிகரும் முதல்வருமான விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையிடப்பட்டது. இதையொட்டி, விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வம் அமிர்தராஜ் திரையரங்கில் நடைபெற்ற ரசிகர்களுக்கான சிறப்பு காட்சியை காண வந்தார்.

அந்த திரைப்படக் காட்சியின் போது, எம்.எல்.ஏ தரப்பில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோவில், கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட “விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தோல்வி” என்ற செய்தியை ரெக்கார்ட் செய்து அந்த வீடியோவை ஒளிபரப்பு செய்துள்ளனர்,

திரையரங்கில் படம் பார்க்க வந்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில், தேர்தல் தோல்வியை மையப்படுத்தித் தயாரித்த வீடியோவைப் திரையிட்டதற்குத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அரசியல் நாகரீகமின்றி, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனும் வேட்பாளருமான விஜய பிரபாகரனின் தேர்தல் முடிவை வைத்துத் திரையரங்கில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட தவெக எம்.எல்.ஏ-வைக் கண்டித்து தேமுதிகவினர் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அமிர்தராஜ் திரையரங்க முற்றுகையிட முயன்றனர்.அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எம்.எல்.ஏ.செல்வம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்




