மூத்த திரைப்பட நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சினிமாவில் 1974-ல் ராமராஜ்யம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சரத்பாபு, அதன்பிறகு பல படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சாகர சங்கம், சுவாதிமுத்யம், குப்பேடு மனசு, அபிநந்தனா, நோமு, யம கிங்கராடு, அமர்ஜீவி போன்ற தெலுங்கில் இன்றும் பாராட்டுக்களை பெற்று வரும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் சலங்கை ஒலி, மூன்று முகம், முத்து, அண்ணாமலை போன்ற படங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். இவர் கடைசியாக தெலுங்கில் வெளியான வக்கீல் சாப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு செப்சிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது. அவர், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகவும் சிகிச்சையில் இருந்தார். இன்று மதியம் 1.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அவர் குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். அவருடைய மறைவுக்கு தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலரும் சமூகவலைதளம் வாயிலாக இரங்கல் கூறி வருகின்றனர்.