சென்னையில் பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார். அவருக்கு வயது 87.
நடிகர் ஏவிஎம்.ராஜனின் மனைவியும், பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா வயது மூப்பு காரணமாக காலமானார். 1958-ம் ஆண்டு வெளியான ‘செங்கோட்டை சிங்கம்’ என்ற தமிழ் படத்தின் மூலம் திரையுலகில் புஷ்பலதா அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர்.சிவாஜி, முத்துராமன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட நடிகர்களுடன் நூற்றுக்கணக்கான படங்களில் அவர் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளர், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் புஷ்பலதா நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் ‘நான் அடிமை இல்லை’, கமல்ஹாசனுடன் ‘கல்யாண ராமன்’, ‘சகலகலா வல்லவன்’, ‘சிம்லா ஸ்பெஷல்’ உள்பட பல படங்களில் முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ளார்.
‘நானும் ஒரு பெண்’ படத்தில் ஏவிஎம்.ராஜனுடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 1999-ம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான ‘பூவாசம்’ என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். புஷ்பலதாவின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். புஷ்பலதாவின் இறுதிச் சடங்கு சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.