கனமழையின் காரணமாக ஊத்தங்கரையில் ஏரி உடைந்து சாலையில் நின்றிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஒரே நாளில் 24 செண்டி மீட்டர் மழை பெய்துள்ள நிலையில், நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஊத்தங்கரையில் ஏரி உடைந்து சாலையில் நின்று இருந்த வாகனங்கள் அடித்துச் சென்ற சம்பவம் குறித்த வீடியோக்கள் புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரையில் இருந்து திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.
