தமிழகம் முழுவதும் அறுபடை வீடுகள் உள்பட முருகன் கோயில்களில் வரும் 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வைகாசி விசாக திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.
அறுபடை வீடுகளில் முதல்படைவீடு மதுரை திருப்பரங்குன்றத்தில்இருப்பதால் பக்தர்கள் முதலில் இங்கு தரிசனம் செய்துவிட்டு பின்பு பழனி அல்லது திருச்செந்தூர் செல்வது வழக்கம் . எனவே பக்தர்களின் வசதிக்காக மதுரையிலிருந்து சிறப்பு பேருந்துகளும் ,ரயில்களும் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் பழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக மதுரை- பழனி இடையே சிறப்பு ரயிலை இயக்க மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை- பழனி இடையே சிறப்பு ரெயில் வருகிற 12-ந் தேதி மதுரை ரெயில் நிலையத்திலிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.25 மணிக்கு பழனி ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் பழனியில் இருந்து ஒரு சிறப்பு ரெயில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும். இந்த ரெயில், இருமார்க்கங்களிலும் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில், 10 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 பார்சல் வேனுடன் இணைந்த இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இது போலவே திருச்செந்தூருக்கும் சிறப்பு ரயில்களும்,200க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.