மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் அதனை தொடர்ந்து,

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களுக்கு உணவு வழங்கும் சிறப்பு திட்டம் இன்று பம்மல் பகுதியில் நடைபெற்றது.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல் சமூகநலக் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ. காமராஜ் மற்றும் மண்டலம்–1 தலைவர் வே. கருணாநிதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நகரின் தூய்மையை பாதுகாக்க தினமும் கடின உழைப்பை மேற்கொண்டு வரும் தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. காலை முதலே பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து உணவு அருந்தினர்.
நகரை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க தூய்மை பணியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. வெயில், மழை உள்ளிட்ட கடினமான காலநிலையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தினமும் சேவை செய்து வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பை மதிக்கும் வகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் துணை மேயர் கோ காமராஜ் மண்டலம் ஒன்று குழு தலைவர் வே கருணாநிதி தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து கலந்துரையாடி உணவருந்தினர்.

மேலும் உதவி ஆணையர் ஸ்வர்ணலதா, மண்டல பொறியாளர் சத்தியசீலன், சுகாதார அலுவலர் மாரிமுத்து, மற்றும் ஆய்வாளர் உட்பட நகராட்சி பணியாளர்கள்.சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த மனிதநேய முயற்சிக்கு தூய்மை பணியாளர்கள் நன்றி தெரிவித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.










