உக்ரைன் மீதான போரைத் துவங்கியுள்ளது ரஷ்யா. இந்நிலையில் இந்தப் போரை நிறுத்த வலியுறுத்தி இந்திய திரைத்துறை பிரபலங்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்..
நடிகை சமந்தா இந்த உலகத்தில் அமைதி இருக்க வேண்டும், அந்த அமைதி நம் அனைவரின் வீட்டிலும் மனதிலும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். எல்லாரும் நிம்மதியாக இருப்பதற்கு தகுதியானவர்களே என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல இயக்குநர் விக்னேஷ் சிவனும் உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஸ்டாப் வார் இன் உக்ரைன் என்ற பதாகையை தாங்கிய சிறுவன் மற்றும் அவரது தாயின் புகைப்படத்தையும் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே உக்ரைனுக்காக அனைவரும் பிரார்த்திப்பதை தவிர்த்து வேறு எதுவும் செய்ய முடியாது என்று தொகுப்பாளரும் நடிகையுமான டிடி கருத்து தெரிவித்துள்ளார். பிரியங்கா சோப்ரா அப்பாவி மக்கள் அவர்களது வாழ்க்கைக்காகவும் அவர்களின் விருப்பத்திற்குரியவர்களின் வாழ்க்கைக்காகவும் போராடி வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் யுவனும் உலக அமைதிக்காக கோரிக்கை விடுத்துள்ளார்.