மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் பேரையூர், எழுமலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் திருடப்படும் சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில் இருசக்கர வாகனங்கள் திருட்டு குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வாகன சோதனை, திருடப்பட்ட இடங்களின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இந்நிலையில் உசிலம்பட்டி அருகே வத்தலக்குண்டு ரோட்டில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது டிவிஎஸ் எஸ்எல் என்ற இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படி வந்த இளைஞரை இடைமறித்து சோதனை நடத்திய போது அவர் திருட்டு இருசக்கர வாகனத்தை இயக்கி வந்ததது கண்டறியப்பட்டது.
து.பாறைப்பட்டியைச் சேர்ந்த காளீஸ்வரன் என்ற அந்த இளைஞரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் உசிலம்பட்டி, பேரையூர், எழுமலை பகுதிகளில் அடுத்தடுத்து இருசக்கர வாகனங்களை திருடிய நபர் என்பது தெரியவந்தது, மேலும் காளீஸ்வரனை கைது செய்த போலீசார், அவர் இயக்கி வந்த இருசக்கர வாகனம் உள்பட பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 7 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.