மதுரை பழங்காநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜா என்பவர் டிராவல்ஸ் நடத்தி வருகின்றார். இவர் இன்று மாலை தனது மனைவி மற்றும் பேரனுடன் மதுரை பைபாஸ் சாலை சொக்கலிங்க நகர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த போது திடீரென அவ்வழியே சைக்கிளில் வந்த நபர் குறுக்கே வந்ததால் இடது புறமாக வாகனத்தை திருப்பி உள்ளார். அப்பொழுது திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ராஜா மீது பலமாக மோதியது. இதில் ராஜா மற்றும் அவரின் பேரன் இடது புறம் விழுந்துள்ளனர். மேலும் இவரது மனைவி கலா வலது புறத்தில் விழுந்ததால் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய கலா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தொடர்ந்து சம்பவம் இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து கலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் பேரன் மற்றும் கணவன் கண் முன்னே மனைவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.