• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

மேற்கு வங்க பெண்ணைக் கடத்தி பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநர் இருவர் கைது

ByP.Kavitha Kumar

Feb 6, 2025

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மேற்கு வங்க பெண்ணை ஆட்டோவில் கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், சேலத்தில் இருந்து சென்னை மாதவரத்தில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு செல்ல பேருந்து மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பிப்ரவரி 3-ம் தேதி இரவு வந்துள்ளார். பேருந்து நிலையத்திற்கு வெளியே நின்ற அவரை ஆட்டோ ஓட்டுநர் வண்டியில் வலுக்கட்டாயமாக ஏற்றியதாக கூறப்படுகிறது. வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்ற போது ஆட்டோ ஓட்டுநர், தனது நண்பர்களுக்கு போன்செய்து வர சொல்லியுள்ளார். இதையடுத்து, நண்பர்கள் இருவர், வண்டலூர் அருகே அதே ஆட்டோவில் ஏறியுள்ளனர். பின்னர், அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்த பெண், தனது தோழியின் கணவருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக போலீசார், ஆட்டோவில் செல்லும் பெண்ணின் செல்போன் டவரை கண்காணித்து ஆட்டோவை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். போலீஸார் பின் தொடர்ந்து வருவதை அறிந்த ஆட்டோ ஓட்டுநர், மதுரவாயல் அருகே மாதா கோயில் தெருவில் அந்த பெண்ணை கீழே இறக்கி விட்டு விட்டு அங்கிருந்து மூன்று பேரும் தப்பி ஓடி விட்டனர்.

அங்கிருந்த பெண்ணை மீட்ட காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினார். தப்பியோடிய மூவரையும் சிசிடிவி கேமரா உதவியுடன் தேடினார். இந்த சம்பவம் குறித்து வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முத்தமிழ்செல்வன், தயாளன் என்ற இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.