மதுரை பெருங்குடி பகுதியில் சிறுவர் உட்பட ஐந்து பேரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் இருவர் கைது. போலீசாருக்கு பயந்து தப்பி ஓடியவர்கள் பைக் விபத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையின் போது கைது..,
மதுரை விமான நிலைய சாலையில் உள்ள பெருங்குடி சங்கையா கோவில் தெரு பகுதியில் நேற்று முன் தினம் இரவு ஆறு வயது சிறுவன் உட்பட ஐந்து பேரை கத்தியால் வெட்டி விட்டு இரு வாலிபர்கள் தப்பிச் சென்றனர்.
காயமடைந்த ஐந்து பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இது தொடர்பாக பெருங்குடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் பெருங்குடி சௌராஷ்ட்ரா காலனியைச் சேர்ந்த மாரி, முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த சசிகுமார் ஆகிய இருவர் மீதும் எஸ்சி /எஸ்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் போலீசார் வருவதை அறிந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற போது, விபத்தில் சிக்கி காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பெருங்குடி போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் மாரி, சசிகுமார் ஆகிய இருவருக்கும் அடைக்கலம் கொடுத்ததாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.