• Sat. May 4th, 2024

திமுக ஆட்சியில் கிணற்றில் போட்ட கல்லாக மதுரை டைட்டில் பார்க்.., சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

திமுக ஆட்சியில் மதுரையில் அறிவித்த டைட்டில் பார்க் கிணற்றில் போடப்பட்ட கல்லாக இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
விவசாயிகளுக்கு எதிராக இந்த அரசு எடுத்து வருகிற நடவடிக்கைகளை தோலுரித்துக் காட்டுகின்ற விதமாகவும், மதுரை மாவட்டம் பெரியார் வைகை பாசன திட்டத்தின் கீழே திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர் கால்வாய், உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் ஆகிய ஒருபோக பாசனத்திற்கு நீரை திறந்து விட வேண்டும் என்று தொடர் போராட்டம் நடத்தி வருகிற விவசாயிகளின் கோரிக்கையை, மாவட்ட ஆட்சியரிடம் 3 முறை நேரிலே மனுக்களை வழங்கினோம் அணைகளில் நீர்இருப்பு இருந்தும் கூட தண்ணீரை திறந்து விட இந்த அரசு முன்வரவில்லை.
அதை தொடர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கின்ற வகையிலும் எடப்பாடியாரின் ஆணையைப் பெற்று, மாவட்ட ஆட்சியரிடத்திலே, கழக நிர்வாகிகள் விவசாயிகளுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் வர சொன்ன அந்த நேரத்திலே சென்று மனு கொடுக்க செல்லுகிற போது மனு கொடுப்பதற்கு கூட மக்கள் பிரதிநிதிகளான எங்களை அனுமதிக்கவில்லை. குறிப்பாக எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினருடைய தொகுதியை புறக்கணிப்பது நியாயம் அல்ல என்பதை, அரசின் கவனத்தில் கொண்டு வருகிற முறையிலே, ஜனநாயக முறைப்படி அறவழியில் சென்ற எங்களை, கைது செய்து மூன்று பிரிவின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. எங்கள் மீது எத்தனை வழக்கு நீங்கள் போட்டாலும் விவசாயிகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவதில் ஒரு நாளும் பின்வாங்க மாட்டோம். எடப்பாடியார் ஆணையை பெற்று மிகப்பெரிய அளவில் நாங்கள் போராட்டம் நடத்த ஆயத்தமாவோம். முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் வருகின்ற ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நடைபெறுகிறது என்றும் அதில், உலகம் முழுவதும் இருந்து தொழில் மூதலீட்டார்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கின்றன என்று பெருமை பேசியுள்ளார்.அதில் கூட பின்தங்கிய மாவட்டங்களில் முன்னுரிமை தருவதாக சொல்லி இருக்கிறார். அம்மா முதன்முதலாக உலக முதலீட்டார்கள் மாநாட்டை நடத்தினார்.அதனைத் தொடர்ந்து அவரின் வழியில் எடப்பாடியார் 2019 ஆம் ஆண்டு மூன்று லட்சம் கோடியில் முதலீட்டை ஈர்த்து,இதன்மூலம், 10.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தார். அதன் பிறகு 79 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 52 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,24,824 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை கிடைக்க செய்தார். அதேபோல் வெளிநாட்டு பயணத்தின் போது 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 8,875 கோடி முதலீட்டின் மூலம் 35,520 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்தார்.
தமிழ்நாட்டிலே தொழில் தொடங்க முன் வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களை வரவேற்க யாரும் ஊரே என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார். தகவல் தொழில் நுட்பத்துறையின் தாய் வீடான சிலிக்கானுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஆனால் திமுக அரசு தென் தமிழகத்தில் இன்றைக்கு தொழில் புரட்சிக்கு நீங்கள் என்ன முயற்சி எடுத்து இருக்கிறீர்கள்? மதுரையில் டைட்டில் பூங்கா அறிவித்து இன்றைக்கு கிணற்றில் போட்ட கல்லாக தூங்கிக் கொண்டிருக்கிறது. அது போல, மதுரைக்கு அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் என அறிவித்து இன்னமும் நிதி கிடைக்கவில்லை.
அம்மாவுடைய காலத்திலே மதுரையிலிருந்து, தூத்துக்குடி வரை எக்கனாமிக் காலிடார் என்கிற தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள். அதனையொட்டி எடப்பாடியார் அதற்கான பல முன் முயற்சிகளை எடுத்து, இடம் மானியமாக தருவது,மின்சாரத்தை மானியமாக தருவது, வரிவிலக்கு அளிப்பது என பல முயற்சிகள் எடுத்தார். தற்போது அது எந்த நிலைமையில் இருக்கிறது என்று சட்டசபையில் கூட கேள்வி முன் வைத்த போது, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முயற்சியில் நடந்து கொண்டிருக்கிறது என்று பதில் சொன்னார். தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி போன்றவற்றில் தொழிற்சாலைகள் தற்போது மூடப்பட்டு தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளன. இப்போது மதுரையில் இட்லி தொழிற்சாலை ஒன்று தான் நடைபெறுகிறது வேறு எந்த தொழிற்சாலை நாம் பார்க்க முடியவில்லை.
நீங்கள் அறிவித்த அந்த டைட்டில் பார்க் என்பது இன்றைக்கு எந்த நிலைமையில் இருக்கிறது என்று தெரியவில்லை. மதுரையை மட்டும் நீங்கள் புறக்கணிப்பது ஏன்? அறிவிப்புகள் கானல் நீராக இருக்கிறதே, அதை காட்சிப்படுத்துவதற்கு நீங்கள் முயற்சி எடுப்பீர்களா? ஒரு கோடியே 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர் அவர்களின் வறுமை ஒழித்து வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு முதலமைச்சர் முன்வருவாரா? இல்லை வெறும் வாய்ஜாலத்தில் பேசிக்கொண்டே இருப்பாரா? அல்லது செயல் வடிவம் கொடுப்பாரா?
அலங்கார வார்த்தைகளால் இன்றைக்கு இளைஞர்களுடைய வாழ்விலே ஒளி ஏற்ற முடியாது. முதலீட்டார்கள் மாநாட்டில் அம்மா, எடப்பாடியார் அமைத்துக் கொடுத்த அந்த வழித்தடத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து அதை செயல் வடிவம் ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்க முன் வருவீர்களா?
போராடுகிறவர்கள் மீது குண்டாஸ் வழக்கு, ஒரு கோடி பேர்கள் ஈடுபட்டிருக்கிற சிறு குறு தொழில் நிறுவனங்கள் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று போராடுவர்கள் மீது நீங்கள் வழக்கு போடுகிறீர்கள்? தமிழ்நாட்டில் இருக்கிற எட்டு கோடி தமிழர்களும் உங்களுக்கு எதிராக போராடுகிற மனநிலையில் இருக்கிறார்களே? எட்டு கோடி தமிழர்கள் மீது வழக்கு போட்டு நீங்கள் சிறையில் அடைத்து விடுவீர்களா?
உலகத்திற்கே வழிகாட்டும் வகையில் தமிழர்கள் உரிமைக்காக போராடுபவர்கள். அவர்கள் மீது அடக்கு முறையை கையாண்டு பொய் வழக்குகளை போடுவது என்பது உங்களுக்கு கைவந்த கலை ஆனால், உங்களுடைய அந்த அடக்கு முறையை, வழக்குகளை,காட்டி எங்களை மிரட்டி போராட்டத்தில் இருந்து பின்வாங்க செய்வது என்பது ஒரு பகல் கனவாக இருக்கும். போராட்டத்திலிருந்து ஒரு பொழுதும் பின்வாங்க மாட்டோம் எடப்பாடியாரின் வழிகாட்டுதலோடு களத்தில் வெற்றி காண்போம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *