
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும், மலைவாழ் படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திச் சி. ஐ. டி. யு. போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு நீலகிரி மண்டல துணை செயலாளர் சாமிநாதன் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார்.
நடைபெற்ற இப்போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து கடந்த 2003-ம் ஆண்டுக்குப் பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வேலைப்பளுவை திணிக்கக் கூடாது. அனைத்து பணிமனைகளுக்கும் தேவையான உதிரிபாகங்கள் வழங்க வேண்டும். பணிமனைகளில் கூடுதல் ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நிர்வாகிகள் பேசினர். உண்ணாவிரத போராட்டம் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடந்தது. இதில் நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
