உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், வேலூர் மாநகராட்சி 37ஆவது வார்டில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஓல்டு டவுன் பகுதியில் வசித்து வருகிறார் திருநங்கை கங்கா. தென்னிந்தியத் திருநங்கைகள் கூட்டமைப்பின் செயலாளராக இருந்து வருகிறார். 2002 முதல் 20 ஆண்டுகளாக தி.மு.க-வில் உறுப்பினராகவும் உள்ளார். 50 பேர் கொண்ட கலைக்குழு ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் வேலூர் மாநகராட்சி 37 ஆவது வார்டில் திமுக வேட்பாளராகத் திருநங்கை கங்கா உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், “தேர்தலில் வென்றால் எனது வார்டில் உள்ள அனைத்துத் தெருக்களுக்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவேன். எனக்கு வாய்ப்பளித்து முதல்வர் ஸ்டாலின் எனது சமூகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தச்சூழலில் வேலூர் 37ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட கங்கா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி வாகை சூடியுள்ளார்.