மனநல சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2மகள்களை தூக்கிலிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகர் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அருகேயுள்ள பி.குமாரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (37). இவருக்கு பெத்தம்மாள் (35) என்ற மனைவியும், பாண்டிச்செல்வி (6) மற்றும் கார்த்தியாயினி (2 1/2) என இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர். சரவணக்குமார் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று வழக்கம் போல சரவணக்குமார் வேலைக்குச் சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்தார். வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் நீண்ட நேரமாக கதவை தட்டிய அவர், வீட்டிற்குள் இருந்து மனைவி மற்றும் மகள்கள் யாரும் வெளியே வராததால், வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அங்கு வீட்டிற்குள் தனது மனைவி பெத்தம்மாள் மற்றும் 2 குழந்தைகளும் தூக்கிட்டு இறந்து கிடப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவலறிந்த ஆமத்தூர் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, தூக்கிட்டு இறந்து கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் இறந்து போன பெத்தம்மாள், கடந்த 2 ஆண்டுகளாக சற்று மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிய வந்தது. மகள்களை கொன்று தூக்கிலிட்ட பின்பு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மனநல சிகிச்சை பெற்று வந்த நிலையில் பெத்தம்மாள் தனது மகள்களுடன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.