




கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் ஜோதிவடத்தை சார்ந்த சோற்றுக்கற்றாழை வியாபாரி பிரபு (40), இவரது மனைவி மதுமிதா (35), குழந்தைகள் தியா (10), ரிதன் (3), மதுமிதாவின் அப்பா முத்துக்கிருஷ்ணன் (61) ஆகிய ஐந்து பேரும் குடும்பத்துடன் கடந்த 18-ஆம் தேதி உறவினர் வீட்டு திருமணத்திற்காக டெல்லி சென்றுள்ளனர்.
அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு கடந்த 28-ஆம் தேதி கொல்கத்தா சுற்றுலா சென்றுள்ளனர்.


சுற்றுலா சென்றவர்கள் கொல்கத்தாவின் மச்சுவா பஜாரில் உள்ள பால்பட்டியில் அமைந்துள்ள ருத்ராஜ் ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
நேற்று இரவு பிரபு, அவரது மனைவி மதுமிதா ஆகிய இருவரும் வெளியே சென்று இருந்த நிலையில், தீ விபத்து நடந்து அந்த ஹோட்டலில் இருந்த 14 பேர் உயிரிழந்தனர்.
இதில் தாத்தா முத்துகிருஷ்ணன் பேத்தி தியா, பேரன் ரிதன் ஆகிய மூவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊரான கரூர் கொண்டு வருவதற்கு பிரபு குடும்பத்தினர் தமிழக அரசின் உதவியை நாடியுள்ளனர்.
கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்த மூன்று பேர் உடல்களை சொந்த ஊருக்கு விரைவாக கொண்டு வர நடவடிக்கை.

உப்பிடமங்கலம், ஜோதிவடம் கிராமத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வந்த கரூர் கோட்டாட்சியர் முகமது பைசல், வட்டாட்சியர் குமரேசன் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர் மூலமாக மேற்குவங்க அரசுத்துறை அதிகாரிகளிடம் விரைவாக கரூர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க பேசி உள்ளதாக, உறவினர்களை நேரில் சந்தித்தபோது கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

