தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி அருகேயுள்ள சூட்டிங் மட்டம் பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் பள்ளி அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி தற்போது ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்கள் மக்கள் கூட்டத்தால் களை கட்டியுள்ளன.
இந்நிலையில், ஊட்டி – கூடலூர் சாலையில் அமைந்துள்ள சூட்டிங் மட்டம் பகுதிக்கு தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கேரள, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சூட்டிங் மட்டம் பகுதியை முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் மூலம் சூழல் மேம்பாட்டு குழுவினருக்கும் அதிக வருவாய் கிடைத்து வருகிறது.