மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 10,425 மருத்துவ இடங்களை பூர்த்தி செய்வதற்காக, நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு, செப்டம்பர் 22ஆம் தேதி முதல் ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
அதே போல் கால்நடை மருத்துவ படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம். கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவில் படித்திருக்க வேண்டும். செப்டம்பர் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல தரப்பினரும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அந்த கோரிக்கைக்கு ஏற்றவாறு அக்டோபர் 3ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.