கல்லூரி வகுப்புகளுக்கான செமஸ்டர் தேர்வை நேரடி தேர்வாக நடத்தவுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வு நடத்த கோரி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் இன்று இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு தொடங்கவிருந்த, நிலையில் நேரடி தேர்வை ரத்து செய்யகோரி திடிரென ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக வந்து முற்றுகையிட்ட மாணவர்கள் ஆன்லைனில் வகுப்புகளை நடத்த வேண்டும் என கோரிக்கை முன்னிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர் .
சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் கல்லூரி நிர்வாகம் இன்று நடைபெறவிருந்த தேர்வை கல்லூரி நிர்வாகம் இரண்டு வாரத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்தது.
ஆனாலும் மாணவர்கள் ஆன்லைன் தேர்வை நடத்தகோரி பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை கலைந்துசெல்லமாட்டோம் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதிலும் பரபரப்பான சூழல் உள்ளது.
ஆன்லைன் வகுப்புகளே அதிகளவில் நடத்திய நிலையில் நேரடி தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறினர்.இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் சார்பாக 5 பேர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.