• Sat. May 4th, 2024

“இஸ்லாமியர்களை பெருமைப்படுத்தும் படம் இது” – ஃபர்ஹானா தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேச்சு

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, அடுத்த வாரம் 12-ம் தேதி வெளியாகும் ஃபர்ஹானா திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது,

“கடந்த மாதத்தில் தொடர்ச்சியாக வாராவாரம் நான் நடித்த படங்கள் வெளியானது. படம் வெளியாவதற்கும், எனக்கு எந்த சம்பந்தமுமில்லை. அது என் கையிலும் இல்லை. கடந்த வருடத்தில் எனது படம் இரண்டுதான் வெளியானது. அதனால் இந்த ஆண்டு எனது படத்திற்கு எந்த விருதும் கிடைக்க வில்லை. வருடா வருடம் விருதுகள் பல வென்ற எனக்கு இந்த வருடம் பல விருது விழாக்களின் அழைப்புகூட வரவில்லை. க/பெ. ரணசிங்கம் படத்திற்கு அங்கீகாரம்கூட கிடைக்கவில்லை. இதில் எனக்கு வருத்தமே.
நெல்சன் இந்த கதையை சில வரிகளில்தான் கூறினார். “பிடித்திருந்தால் சொல்லுங்கள். நான் டெவலப் செய்து எடுத்து வருகிறேன்” என்றார். அதற்குள் ஊரடங்கு வந்துவிட்டது. ஆனால், அடிக்கடி நான் நெல்சன் சாரிடம் அந்த கதை என்ன ஆச்சு? எனக்கு பிடித்திருக்கிறது என்று கேட்டுக் கொண்டே இருப்பேன்.
இப்படம் மிகச் சிறந்த படமாக எனக்கு இருக்கும். அதற்காக நான் நடித்த மற்ற படங்களை குறை சொல்கிறேன் என்று அர்த்தமில்லை. சில படங்கள் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கும். இப்படம் அது போலத்தான். எஸ்.ஆர்.பிரபு சார் அடிக்கடி என்னிடம், “பெரிய படங்கள் செய்யுங்கள்” என்று சொல்லி கொண்டே இருப்பார். எனக்கு பிரபு சார் நல்ல வெல் விஷர்.இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. மிக சிரமமான பகுதிகளில்தான் படப்பிடிப்பு நடத்தினோம். ஐஸ்வர்யா தத்தா இங்கே உணர்சிவசப்பட்டு பேசினார். ஜித்தன் ரமேஷ் நடிப்பு, இது மாதிரி ஒரு கணவர் நமக்கு வேண்டும் என்று எல்லா பெண்களும் நினைக்கும்படியாக இருக்கும். எங்களின் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்…” என்றார்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது,

“முதலில் என் அம்மாவிற்கு நன்றி. நான் டைரக்ட் செய்த முதல் படமான ஒரு நாள் கூத்து வெளியானபோது உயிருடன் இருந்தார். ஆனால், இந்த படத்திற்கு அவர் உயிருடன் இல்லை. கொரோனா வந்த பிறகு அனைவருக்குமே வாழ்க்கை முறை அனைத்துமே மாறிவிட்டது. நிறைய கற்றுக் கொடுத்தது. இந்தக் காலகட்டத்தில் எனது குடும்பத்தில் 4 பேர் அடுத்தடுத்து என் அம்மாவையும் சேர்த்து மறைந்தார்கள். அந்த உணர்வால் என்னால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை.
ஆனால், எஸ்.ஆர்.பிரபு சார் அடிக்கடி என்னை தொடர்பு கொண்டு பேசிக் கொண்டே இருப்பார். அதுதான் எனக்கு மிகுந்த நம்பிக்கையளித்தது. அவருக்கு நன்றி. அடுத்து பிரகாஷ் பாபு சாரிடம் இந்த கதையை கொடுத்தேன். அவர் நன்றாக இருக்கிறது என்று கூறினார்.
சில காலத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் என்னை அழைத்து, “எனக்கு வெப் சீரிஸ் வாய்ப்பு வருகிறது. ஆனால், ஒரு கதையும் சரியாக அமையவில்லை. நீங்கள் கூறிய கதை எனக்கு பிடித்திருக்கிறது. அதை வெப் சீரியசாக எடுக்கலாமா?” என்று கேட்டார்.நான் மீண்டும் பிரகாஷ் சாரை அணுகினேன். அப்போது, பிரபு சார் என்னிடம் இக்கதையை 45 நிமிடம் கேட்டார். அவருக்கும் ப்டித்து போக.. அப்படித்தான் இந்த படம் தொடங்கியது.ஒரு படத்திற்கு எழுத்து மிகவும் முக்கியது என்று நான் செல்லும் இடங்களில் எல்லாம் கூறுவேன். என்னுடைய ஆசிரியருடன் இணைந்து இக்கதையை விரிவாக எழுத முயற்சித்தோம். பேச பேச உயிருக்குள் உயிருள்ள கதையாகப் பேச ஆரம்பித்தது. ஃபர்ஹானா திரைப்படம் எனக்கு புது அனுபவமாக இருந்தது.
என்னுடைய 3-வது படம் மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். நான் சென்னை புதுபேட்டையில் வளர்ந்தவன். வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்கும் கடைகள் இருக்கும் தெருவில்தான் வீடு. அங்கு இஸ்லாமியர்கள் அதிகம். புதுப்பேட்டை, திருவல்லிக்கேணி என்று நான் பிரியாணி சாப்பிட்டு வளர்ந்தது எல்லாமே முஸ்லீம் நண்பர்கள் நடுவில்தான். ஆகையால், நான் எடுக்கக் கூடிய படத்தின் பின்னணி, நான் வளர்ந்த.. அனுபவித்த கதையாக ஏன் இருக்கக் கூடாது என்று நினைத்தேன்.மதம் சார்ந்து படம் எடுக்கிறேன் என்று சர்ச்சை எழுந்துள்ளது. என்னுடைய நண்பர்களைப் பற்றித்தான் எடுத்திருக்கிறேன். மதம் சார்ந்தது அல்ல.. மனம் சார்ந்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இப்படத்திற்கு வசனம் எழுத மனுஷ்ய புத்ரனிடம் கொடுத்தோம். அவர் அடுத்த நாள் எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருக்கிறது. படிக்க, படிக்க சுவாராஸ்மாக இருக்கிறது. நானே எழுதித் தருகிறேன் என்றார். முதன்முதலாக திரைப்படத்திற்காக எழுதிய அவர் வசனம் சிறப்பு வாய்ந்தது. இப்படத்தில் அவருடைய வலிமையான வசனங்களை அனல் பறக்க பேசியிருப்பது அனுமோள்தான்.
இசையமைப்பாளர் ஐஸ்டின் பிரபாகரனின் வளர்ச்சி என்னை வியக்க வைக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் சிறந்த இசையைக் கொடுத்து வருகிறார். ஃபர்ஹானா படத்திலும் 3 சிறந்த பாடல்களைக் கொடுத்திருக்கிறார். எனக்கு தேவையான இசையை ஐஸ்டினைத் தவிர வேறு யாரிடமும் உரிமையாக கேட்க முடியாது. நடிகை ஆண்ட்ரியா இப்படத்திற்காக ஒரு பாடலை பாடியிருக்கிறார்.மான்ஸ்டர், குழந்தைகளுக்கு ஏற்ற மென்மையான படம். ஆனால், இந்த ஃபர்ஹானா அப்படி இல்லை. நிறைய விஷூவல் சேலஞ்ச் இருந்தது. என்னுடைய கதையை நான் நினைத்தது போலவே காட்சியாக மாற்றிய கோகுலின் கேமரா கண்களுக்கு நன்றி.


பணத்தை கொடுத்தால் மட்டுமே வெற்றி என்றால் பலருக்கும் வெற்றிக் கிடைக்காது. பணத்தைத் தாண்டி ஆத்மார்த்தமாக பணியாற்றினால்தான் வெற்றி கிடைக்கும். வேலை நேரத்தைத் தாண்டியும் படத் தொகுப்பாளர் சாபு பணியாற்றியதால்தான் இப்படம் சிறப்பாக வந்திருக்கிறது.
மற்ற மொழிகளில் இஸ்லாமிய பின்புலத்தில் படங்கள் வருகிறது. நமது நாட்டை எடுத்துக் கொண்டால் இஸ்லாமியர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். இப்படம் இஸ்லாமிய நண்பர்களை தாழ்த்தி எடுக்கவில்லை.
கத்தி மீது நடக்கக் கூடிய கதைதான் இப்படம். என்னுடைய குழுவில் 4 பேர் இஸ்லாமியர்கள். ஏனென்றால், இஸ்லாமிய பின்புலத்தில் எடுக்கக் கூடிய படத்தில் எந்தவித தவறும் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.கிட்டி சாரின் வீட்டிற்கு சென்றேன். வாழ்க்கையை ரசனையாக வாழக் கூடிய மனிதர். இப்படி இருக்கும் ஒரு மனிதரிடம் எப்படி நடிப்பை வாங்குவது என்று தோன்றியது. படப்பிடிப்பு தளத்தில் அவரைப் பார்த்து நாம் எப்படி நன்றாக நடிக்கப் போகிறேன் என்று அனைவரும் பயந்தார்கள். காட்சியில் அவர் கடைசியாக நின்றாலும் நடிப்பில் சிறிது அழகுக் கூட்டி விடுவார்.ஜித்தன் ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் வரும் காட்சிகளைத்தான் நான் பெரும்பாலும் ரசித்தேன். இதில் ஜித்தன் ரமேஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் காட்சிக்கு மேலும் வலு சேர்த்தார்கள்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்ததில், குற்றமே தண்டனை என்ற படம்தான் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இப்படம் தொடங்கி 10 நாட்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. பிறகு சரியானது. அவருடைய நடிப்பு திறமையால் பல படங்கள் வந்து கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.
இந்தக் காட்சி சவாலாக இருக்கும் என்று நான் நினைத்த காட்சியில் உறுதுணை அளித்து நடித்துக் கொடுத்தார். கிட்டதட்ட 5 மணி நேரம் வெயிலில் அவரை நிற்க வைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறேன். ஆனால், இப்படம் அந்த வலிக்கு மருந்தாக இருக்கும் என்று நினைக்கிறேன்…” என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது,

“நெல்சன் என்ற மனிதருக்காக ஆரம்பிக்கப்பட்டது இப்படம். 3 படங்கள் வரிசையாக எடுக்கலாம் என்று பேசித்தான் இப்படத்தை ஆரம்பித்தோம். ஆனால், மூன்று வருடங்களாக ஒரே கதையைத்தான் எடுத்திருக்கிறோம். அவர் எல்லோரையும் கஷ்டப்படுத்தியாக கூறினார். ஆனால், அவர் அப்படி இருந்ததால் தான் படம் சிறப்பாக வந்திருக்கிறது. மான்ஸ்டர் படத்தில் வீட்டினை செட் அமைத்து எடுத்தோம். ஆனால், எலியை உண்மையாக வைத்துதான் எடுத்தோம். ஆனால், அதை யாரும் நம்பவில்லை.

இந்த ஃபர்ஹானா படம் மூன்று மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் மதம் சார்ந்து சர்ச்சைக்குரிய விதத்தில் எதுவும் இல்லை. இஸ்லாமியர்கள் பயப்படும் படமாக இல்லாமல் கொண்டாடும்விதமான படமாக இருக்கும்…” என்றார்.

நடிகை அனுமோள் பேசும்போது,

“கேரளாவில், டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்தில் நடிக்கப் போகிறேன் என்று கூறியதும் என்னுடைய நண்பர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். நெல்சன் சாருக்கு நன்றி. ஐஸ்வர்யா ராஜேஷ் மேடம் எப்படி பழகுவார்கள் என்று தயங்கிக் கொண்டிருந்தேன். ஆனால், எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் நித்யா. அதை அழகாக காட்டிய இயக்குநருக்கு நன்றி. இப்படத்தில் திரில்லர், சண்டை என்று எதிர்பார்க்கும் அனைத்தும் இருக்கிறது…” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசும்போது,

“நீண்ட வருடங்கள் கழித்து திரையில் என்னைப் பார்க்கிறேன். இந்த தருணத்திற்காக பல வருடங்கள் காத்திருந்தேன். திரையில் நான் எப்படி இருக்கிறேன் என்று படம் பார்த்து விட்டு நீங்கள் அனைவரும் கூறுங்கள்.நெல்சன் சாரிடம் இருந்து ஒருநாள் ஒரு செய்தி வந்தது. இப்படத்திற்காக கேட்டார். மான்ஸ்டர் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படத்தில் வரும் அந்தி மாலை.. பாடல் எனக்கு பிடித்த பாடல். இப்படத்தில் என்னை தேர்வு செய்ததும், டிரீம் வாரியர்ஸ் நிறுவனம்,
நெல்சன் வெங்கடேசன் சார் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மேடம் உடன் நடிக்கப் போகிறேன் என்றதும் இதைவிட வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்! என்னால் நடிக்கவெல்லாம் முடியாது என்று இனி யார் கூறுவார்கள்? என்று என் அம்மாவிடம் உற்சாகத்துடன் கூறினேன். என்னை அழகாக காட்டிய ஆடை வடிவமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் கோகுல் இருவருக்கும் நன்றி..” என்றார்.

நடிகர் கிட்டி பேசும்போது,

“டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் முதல் 3 சிறந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒருவராக இருக்கிறார்கள்.
இயக்குநர் நெல்சன் சாரிடம்.. “இந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியாக வருவேனா என்று தெரியாது. நான் மிகவும் எடை குறைந்திருக்கிறேன்..” என்றேன். “எங்களுக்கு அதுதான் சார் வேண்டும்” என்றார். கதாபாத்திரத்தை வடிவமைக்கும் திடம், காட்சிகளில் நுணுக்கம் என்று அனைத்து விஷயங்களிலும் சிறப்பானவர் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளை அருமையாக கூறியிருக்கிறது இந்த ஃபர்ஹானா திரைப்படம். இந்தக் கதாபாத்திரம் என்னை ஒரு குறிப்பிட்ட தளத்திற்கு கொண்டு போகும் என்று ஆழமாக நம்புகிறேன். கடந்த 20 வருடங்களில் எனக்கு சிறப்பான கதாபாத்திரம் கிடைத்தது இந்த ஃபர்ஹானா படத்தில்தான். நான் நடித்த 75 கதாபாத்திரங்களில் சில பாத்திரங்கள் என்னை வெகுவாக கவர்ந்தவை. அதில் ஒன்று இந்த படத்தில் வரும் என் கதாபாத்திரம்.
படப்பிடிப்பு நடந்த இடம் சிறியதாக இருந்தாலும், என்ன தேவையோ அந்த இடத்திற்குள்ளேயே நுணுக்கமாக காட்ட வேண்டும் என்று கூறினார். அவர் கூறியதைபோல படக் குழுவினர், ஒளிப்பதிவில் திறமையாக செயல்பட்டிருக்கிறார்கள். இதற்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.

நடிகர் ஜித்தன் ரமேஷ் பேசும்போது,

“கடந்த 2 வருடங்களாக தாடியுடன் சுற்றிக் கொண்டிருந்ததற்கு இப்போது படம் வெளியாவதில் மகிழ்ச்சி. நெல்சன் வெங்கடேசன் கதை கூறியதும், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படப்பிடிப்பு தளத்தில் என்னை நிமிர்ந்து நிற்கவே விடமாட்டார். இப்படத்திற்காக 7 கிலோ உடல் எடையைக் குறைத்தேன். என்னுடைய உடைகள் மிகவும் தளர்வாக இருக்கும். தனியாக என்னை யாராவது பார்த்தால் பிச்சைக்காரன் என்று முடிவெடுத்து விடுவார்கள்.ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி சொல்லியே ஆக வேண்டும். கேமராவிற்கு பின்பும் ஃபர்ஹானாவாகவே இருப்பார். அந்தளவிற்கு அர்ப்பணித்து நடித்திருக்கிறார். நடன இயக்குநர் என்னை நன்றாக ஆட வைத்தார்…” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *