• Thu. Apr 25th, 2024

குடிமகன்களுக்கு ஆப்பு.. திருவண்ணாமலை ஆட்சியர் அதிரடி!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மெகா தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் உள்ள 4 நகராட்சி, 10 பேரூராட்சி, 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 860 ஊராட்சிகள் உள்ளிட்ட இடங்களில் 973 தடுப்பூசி முகாம் அமைத்து 1.20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது, அதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழக அரசின் உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுபடுத்தும் விதமாக மாவட்டத்தில் உள்ள 18 லட்சம் பேருக்கும் 100% தடுப்பூசி போடும் வகையில் இதுவரையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 43 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள 57 சதவீதம் பேருக்கு வரும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ்: மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாமில் கிராமங்கள்தோறும் மருத்துவ பணியாளர்கள் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் ஞாயிற்று கிழமை அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்க வருபவர்கள் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் காண்பித்தால் மட்டுமே அவர்களுக்கு மதுபாட்டில் விற்பனை செய்ய வேண்டும் என்றும், மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மூன்று பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதற்கு முன்னதாக நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொரோனா இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டால்தான் டாஸ்மாக் கடையில் மது வாங்க முடியும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *