மத்திய அரசை விமர்சிப்பவர்களுடன் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், கடந்த காலங்களில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், முற்போக்குவாதி நரேந்திர தபோல்கர் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொடூரத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் கடுமையாக எதிர்த்து குரல் எழுப்பினர். நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பா.ஜ.க அரசை விமர்சித்து வருகிறார். அதன் வன்முறை முகத்தை தனது ஒவ்வொரு ட்விட்டர் பதிவிலும் வெளிப்படுத்தி வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக சுயேச்சையாக பிரகாஷ்ராஜ் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இருப்பினும் பா.ஜ.க அரசின் மக்கள் விரோத திட்டங்களைத் தொடர்ந்து விமர்சித்துப் பேசி வருகிறார்.
இந்நிலையில், பா.ஜ.க வை நான் எதிர்ப்பதால் என்னுடன் சக நடிகர்கள் பேசுவதற்குப் பயப்படுகிறார்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அரசியலில் நெருப்பு பிராண்டாக இருப்பதால் பல நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் என்னுடன் பணியாற்ற விரும்பவில்லை என கூறியுள்ளார். எனது அரசியல் நடவடிக்கைகளால் எனது பணி பாதிக்கப்படுகிறது. அதற்காக அரசியலைத் தூக்கி வீசிவிட முடியாது. வேண்டுமென்றால் எனது பணியை விட்டு ஒதுங்கியிருக்கலாம். அந்த அளவுக்கு வசதியும் வலிமையும் எனக்கு இருக்கிறது.
இப்போது நான் இன்னும் சுதந்திரமாக உணர்கிறேன். ஏனென்றால் நான் என் குரலை உயர்த்தாமல் இருந்திருந்தால், என் படங்களின் காரணமாக நான் ஒரு நல்ல நடிகனாக மட்டுமே அறியப்பட்டிருப்பேன். ஆனால் நான் இல்லாமல் போகும்போது நல்ல மனிதனாகவும் பிரகாஷ் ராஜ் இருந்தான் என சொல்ல வேண்டும் என விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.