தேனி மாவட்டம், போடியில் நடந்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பினை, கலெக்டர் முரளீதரன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், அவர்கள் தேர்தலின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, அறிவுரை வழங்கினார்.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி, நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சிகளுக்கான கவுன்சிலர் பதவிக்கான தேர்தலை முன்னிட்டு, வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு கடந்த மாதம் ஜன., 31, பிப்., 10 மற்றும் வரும் 18ல், என மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என, கலெக்டர் முரளீதரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று (பிப்.,10) காலை 10 மணியளவில், போடியில் ஒரு தனியார் மண்டபத்தில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. அப்போது அங்கு நேரில் சென்று பார்வையிட்ட, கலெக்டர் வாக்குச்சாவடி அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, எடுத்துரைத்தார். அதன்பின், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் 897 வாக்குச்சாவடி தலை அலுவலர்கள், 897 வாக்குப் பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பேரூராட்சி பகுதிகளுக்கு 1828 வாக்குப் பதிவு அலுவலர்கள் மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு 1760 வாக்குப் பதிவு அலுவலர்கள் என, மொத்தம் 3,588 வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது’ என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.