தமிழ்கடவுளாம் முருகப்பெருமானுக்கு தைப்பூசத் திருவிழா உலகமெங்கும் உள்ள தமிழக மக்கள் வசிக்கும் பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
மலேசியாவில் தமிழக மக்கள் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பத்துமலை, தண்ணீர்மலை, கல்லுமலை முருகன் ஆலயங்களில் காவடிகள் சுமந்தும், அலகு குத்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி முருகப்பெருமானை வேண்டி வருகின்றனர். கொரோனாவைரஸ் பற்றிய அச்சத்தையும் மீறி மக்கள் கோலாகலமாக தைப்பூச திருநாளை கொண்டாடி வருகின்றனர். தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வரும் நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான மலேசியாவில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்களில் பக்தர்கள், பார்வையாளர்கள், வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் என 15 லட்சம் பேர் பத்துமலையில் கூடுவது வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தாண்டு வழக்கமான நடவடிக்கைகளோடு, கூடுதல் சுகாதார முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பத்துமலை முருகன் கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார். பத்துமலைக் குகை முருகன் கோவிலில் இந்துக்கள் தவிர சீனர்களும், தங்கள் குறை தீர வேண்டிக் கொள்வதுடன், இந்துக்களைப் போல் அலகு குத்துதல்,காவடி எடுத்தல் போன்ற வேண்டுதலுடன் டெய்வது வழக்கம். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக முருகனின் தாயான அம்பாளின் ஆலயத்திலிருந்து ரத தேர் புறப்படம். அதே போல் இந்த வருடமும் வெள்ளி ரத தேர் மகா மாரியம்மன் கோவிலிருந்து புறப்பட்டது. முருகக் கடவுள் மற்றும் வள்ளி, தெய்வானையை தாங்கிய பிரமாண்டமான ரத ஊர்வலத்தில் பதிந்த 100 பேர் மட்டுமே தரிசனம் செய்ய அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வெள்ளி ரத தேர் ஊர்வலமானது இந்த ஆண்டு சில பகுதிகள் வழியே தரிசனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பத்துமலை முருகன் கோயிலை சென்றடைந்தது.