

உக்ரைனில் உள்ள மாணவர்கள் தமிழகம் திரும்புவதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ரஷ்ய ராணுவம் 24-2-2022 அன்று உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து, ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டைச் சார்ந்த சுமார் 5,000 மாணவர்கள், பெரும்பாலும் தொழில்முறை கல்வி பயில்வோர் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்ற சூழ்நிலையை அறிந்து, அவர்களை மீட்டுத் தமிழகத்திற்கு அழைத்து வரும் பொருட்டு, மாவட்ட, மாநில அளவில் மற்றும் புதுதில்லியில் தொடர்பு அலுவலர்களை நியமனம் செய்து உதவிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.இன்று (25-2-2022) காலை 10 மணி வரை தமிழ்நாட்டைச் சார்ந்த 916 மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் தமிழ்நாடு அரசை தொடர்பு அலுவலர்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டுள்ளனர்.
இந்தச் சூழலில், தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் உக்ரைனில் இருந்து தாய் நாடு திரும்புவதற்கு ஏற்படும் பயணச்செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும். இது தொடர்பாக மாநில தொடர்பு அலுவலரான ஜெசிந்தா லாசரசை, தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசி எண்-1070. ஜெசிந்தா லாசரஸ், ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகம். 9445869848, 9600023645, 9940256444, 044-28515288 மின்னஞ்சல்: [email protected].உக்ரைன் அவசர உதவி மையம் தமிழ்நாடு பொதிகை இல்லம், புதுதில்லி, வாட்ஸ்அப் எண்: 9289516716, மின்னஞ்சல்: [email protected], இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
