• Sat. Apr 20th, 2024

நாட்டின் மிகப்பெரிய விமான நிலைய திட்டம் – அடிக்கல் நாட்டினார் பிரதமர்

Byமதி

Nov 26, 2021

நாட்டின் மிகப்பெரிய விமான நிலையத்தை உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைக்கும் பிரம்மாண்ட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை மிஞ்சும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ள இதற்கு பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். ரூ.40,000 கோடி முதலீட்டில் இந்த விமான நிலையம், முழுவதுமாக கட்டிமுடிக்கப்படும்போது ‘இதுதான் ஆசியாவிலேயே பெரிய விமானநிலையம் இருக்கும்’ என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த வருடம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநிலத்துக்கு பலன் தரும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படியே ‘நொய்டா சர்வதேச விமான நிலையத்தின்’ அறிவிப்பும் வெளியாகியுள்ளது என சொல்லப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு இந்த விமான நிலையம் ஊக்கம் அளிக்கும் என அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கிழக்கு டெல்லி எல்லைக்கு அருகில் அமையுள்ளதால், இந்த விமான நிலையம் டெல்லி தலைநகர் பிராந்தியத்தின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக இருக்கும். இது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நெருக்கடி குறைவதற்கும் உதவுமென சொல்லப்படுகிறது. இதன் அமைவிடம் காரணமாக டெல்லி, நொய்டா, காசியாபாத், அலிகார், ஆக்ரா, ஃபாரிதாபாத் மற்றும் அருகில் உள்ள பகுதிகள் உள்ளிட்ட நகரங்களின் மக்களுக்கு அருகாமையில் சர்வதேச விமான சேவைகளை கொண்டுசேர்க்கும் என பிரதமர் தெரிவித்தார்.

இந்த விமான நிலையத்தின் முதற்கட்டப்பணி ரூ.10,050 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். 1,300-க்கும் அதிகமான ஹெக்டேர் நிலப்பரப்பில் முடிக்கப்பட உள்ள முதலாவது கட்ட விமான நிலையம், ஆண்டுக்கு சுமார் 1.2 கோடி பயனாளிகளுக்கு சேவை செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.

இந்த விமான நிலையத்தின் சிறப்பம்சங்கள், கரியமில வாயுவை வெளியேற்றாத இந்தியாவின் முதலாவது விமான நிலையமாக இது இருக்கும். திட்டத்தை செயல்படுத்தும் இடத்தில் உள்ள மரங்களைப் பயன்படுத்தி வனப்பூங்கா இந்த நிலப்பரப்பில் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
வடக்கு இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து நுழைவாயிலாக இந்த விமான நிலையம் இருக்கும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்படுகிறது.
சரக்குப்போக்குவரத்திற்கான செலவு மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறைப்பதை நோக்கமாகக்கொண்டு இந்தியாவில் முதல் முறையாக ஒருங்கிணைந்த பலவகை சரக்கு போக்குவரத்து மையம் என்ற கோட்பாட்டைக் கொண்ட விமான நிலையமாக இது இருக்கும். இதில் உள்ள சரக்கு முனையம் 20 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்டதாக இருக்கும். பின்னர் இது 80 லட்சம் மெட்ரிக் டன்னாக விரிவுப்படுத்தப்படும்.

இது ஏராளமான புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதோடு ஏராளமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். தரைவழிப் போக்குவரத்து மையமாக இந்த விமான நிலையம் உருவாகும் என்பதால் மெட்ரோ ரயில் போக்குவரத்து, அதிவேக ரயில் நிலையங்கள், டாக்சி, பேருந்து சேவைகள், தனியார் வாகன நிறுத்தம் போன்ற பன்முக போக்குவரத்து மையமாகவும் இது இருக்கும். இதன் மூலம் சாலை, ரயில், மெட்ரோ மூலம் விமான நிலையத்திற்கு தடையில்லா போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்த இயலும்.

யமுனா விரைவுச்சாலை, மேற்கத்திய புறநகர் விரைவுச்சாலை, ஆக்ரா விரைவுச்சாலை, கிழக்கத்திய புறநகர் விரைவுச்சாலை, டெல்லி-மும்பை விரைவுச்சாலை போன்ற அருகில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் விமான நிலையத்தோடு இணைக்கப்படும். டெல்லிக்கும், விமான நிலையத்திற்கும் இடையேயான பயண நேரத்தை 21 நிமிடங்கள் மட்டுமே என மாற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள டெல்லி – வாரணாசி அதிவேக ரயில் போக்குவரத்து இந்த விமான நிலையத்தோடு இணைக்கப்படும்.

பராமரிப்பு, பழுதுபார்ப்பு, ஓவராலிங் சேவையில் நவீன முறையை இந்த விமான நிலையம் கொண்டிருக்கும். குறைந்த செலவில் இயக்கும் வகையிலும், பயணிகளுக்கு தடையில்லா விரைந்த போக்குவரத்து நடைமுறையோடும் இந்த விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *