• Sat. Apr 20th, 2024

கேத்தி பகுதியில் காட்டுமாடை தாக்கிய நபர்…ஓட்டம் பிடித்த காட்டுமாடு

Byகாயத்ரி

Dec 1, 2021

நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. இவற்றில் காட்டுமாடுகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இவை தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களில் உலா வருவதை காண முடியும். குறிப்பாக, குந்தா வனச்சரகத்திற்குட்பட்ட பெங்கால்மட்டம், கைகாட்டி, முட்டிநாடு, கேத்தி உள்ளிட்ட பகுதிகள், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இவற்றின் எண்ணிக்கை மிக அதிகம். இதனால் காட்டுமாடுகள் – மனித தாக்குதல் சம்பவம் அடிக்கடி நடக்கின்றன.குந்தா வனச்சரகம், கேத்தி தனியார் பொறியியல் கல்லூரி அருகே முன்னங்காலில் காயம் ஏற்பட்ட நிலையில் சாலையோரம் நடமாடி வந்த காட்டுமாடு ஒன்றை, ஒருவர் பெரிய தடியை கொண்டு கொடூரமாக தாக்குகிறார்.

அக்கம்பக்கத்தினர் வயது முதிர்ந்த அந்த காட்டுமாட்டை தாக்க வேண்டாம் என சத்தமிடுகின்றனர். இதனை பொருட்படுத்தாமல் அதை தாக்குகிறார். வலி தாங்க முடியாமல் அந்த காட்டுமாடு அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறது. இருந்தபோதும், அதனை துரத்தி சென்று தாக்குகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காட்டுமாட்டினை தாக்கும் நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *