• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

வீட்டை சீல் வைக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்..!

Byஜெ.துரை

Aug 4, 2023

சென்னை அடையாறில் உள்ள ராமசாமி தோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான இடத்தில் வசிக்கும் வீட்டிற்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தாங்கள் நூற்றாண்டுக்கு மேலாக இந்த பகுதியில் வசித்து வருவதாகவும், நாங்கள் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் நான்கு தலைமுறைக்கும் மேலாக வசித்து வருவதாகவும், தற்போது அதிகாரிகள் உடனடியாக இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று கூறுவதால் நாங்கள் எங்கு செல்வது, அது மட்டுமல்லாமல் அதிகப்படியான அநியாய வரியை விதித்ததன் காரணமாக 15 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலாக தங்கள் வரி கட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள். அன்றாடம் தினக்கூலிக்கு செல்லும் தாங்கள் எப்படி இவ்வளவு லட்சம் ரூபாயை செலுத்தி வசிக்க முடியும்.

இவ்வளவு பணம் இருந்தால் நாங்கள் ஏன் இங்கு இருக்கிறோம். நாங்கள் அப்பார்ட்மெண்ட் போன்ற இடங்களை வாங்கி செல்லலாமே ஏன் நாங்கள் எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாமல் இங்கே வசிக்க வேண்டும்.

நான்கு, ஐந்து தலைமுறைகளாக நாங்கள் இங்கே வாழ்ந்து வருகிறோம். நாங்கள் வரியை செலுத்துகிறோம். நியாயமான வரியை அரசு விதித்தால் கட்ட தயாராக உள்ளோம் என கூறிய பொதுமக்கள், இதற்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.