• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அம்மா மருந்தகங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுள்ளது – கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்

Byமதி

Nov 20, 2021

அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை; மாறாக அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுள்ளது என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் அம்மா மருந்தகங்களை தமிழ்நாடு அரசு மூடி வருவதாக முற்றிலும் தவறான ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கூட்டுறவு சங்கங்களின் மூலம் தமிழ்நாடு அரசு 131 அம்மா மருந்தகங்களையும், 174 கூட்டுறவு மருந்தகங்களையும் ஆக மொத்தம் 305 மருந்தகங்களை நடத்தி வருகிறது.

கடந்த ஆண்டு இயங்கி வந்த அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை 126-லிருந்து 131-ஆக இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் மருந்தகங்கள் அனைத்தும் 20 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் மருந்து மாத்திரைகளை விற்பனை செய்து வருவதால், ஏழை எளிய மக்கள் பெருமளவில் பயன் பெற்று வருகின்றனர்.

மேலும், அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல், கூட்டுறவு மருந்தகங்களின் எண்ணிக்கையும் ஆண்டொன்றுக்கு 60 புதிய மருந்தகங்கள் என்கிற அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளில் 300 புதிய கூட்டுறவு மருந்தகங்களை புதியதாக துவக்குவதற்கு கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வரால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நடப்பு வருடத்தில், நிர்ணயிக்கப்பட்ட 60 என்கிற எண்ணிக்கையைவிட கூடுதலாக 75 மருந்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.