கனமழை காரணமாக மண்சரிவு, மண் அரிப்பு ஏற்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு தினமும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மலைப்பாதையில் மழை, காற்று காரணமாக அவ்வப்போது மண்சரிவு ஏற்படும். இதன் காரணமாக அந்த சமயங்களில் ரயில் சேவை ரத்து செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் டிசமப்ர் 3ம் தேதி கனமழையால் கல்லார் ரயில் நிலையம் முதல் அடர்லி ரயில் நிலையம் வரை மலை ரயில் செல்லும் வழித்தடங்களில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
இதனையடுத்து டிசம்பர் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. 8ம் தேதி மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில் மீண்டும் கனமழை காரணமாக மலை ரயில் பாதையின் பல்வேறு இடங்களில் மண் சரிவும், மண் அரிப்பும் ஏற்பட்டது.
இதனால் டிசம்பர் 10 முதல் 16 வரை 7 நாட்களுக்கு ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டதால் 2 நாட்கள் முன்னதாகவே இன்று காலை முதல் மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ரயில் இயக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.