நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஆர்.கே.சி.லைன் குடியிருப்பு பகுதிகளில் 3 குட்டிகளுடன் தாய்க்கரடி நகர்வலம் வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வனப்பகுதியாக உள்ளது. இதன் அருகில் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளதால் வனவிலங்குகள் நுழைந்து விடுவதுண்டு. நகர்வலம் போல் சுற்றி விட்டு செல்வதுண்டு. சில விலங்குகள் மனிதர்கள் அச்சுறுத்தினால் சேதங்களை விளைவிப்பதுண்டு. சிலநேரங்களில் உயிரிழப்பும் சகஜமே. அந்த வகையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்து இவை அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் அவ்வப்போது நுழைந்து மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.அந்த வகையில் கோத்தகிரி ஆர்.கே.சி. லைன் குடியிருப்பு பகுதியில் 3 குட்டிகளுடன் தாய் கரடி காலாற நடந்து சென்றது. இது அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த தகவல் வெளியே பரவியதால் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
குறிப்பாக கடந்த ஒரு மாத காலமாக கரடிகள் கடைவீதி மட்டுமின்றி பல பகுதிகளில் தொடர்ந்து உலா வருகின்றன. இவை பொதுமக்களை தாக்கி அசம்பாவிதம் ஏற்படுத்திவிடக்கூடும் என அஞ்சுகின்றனர். வனத்துறைக்கு இது குறித்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து உலா வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.