• Mon. Jul 1st, 2024

டீ போட்டு கொடுக்காத ஆத்திரத்தில் மருமகளைக் கொன்ற மாமியார்

Byவிஷா

Jun 29, 2024

தெலங்கானா மாநிலத்தில் டீ போட்டுக் கொடுக்காத ஆத்திரத்தில் மாமியார் மருமகளை கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஹாசன் நகரை சேர்ந்தவர் அஜ்மீரா பேகம் (28). இவருக்கும் ஆட்டோ ஓட்டுநரான முகமது அப்பாஸ்க்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 6 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். இவர்களுடன் அப்பாஸின் தாய் ஃபர்சானா பேகம் (53) வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 15 நாட்களாக மாமியார் மற்றும் மருமகள் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், தனது மருமகள் அஜ்மீரா பேகத்திடம் டீ போட்டு தரும்படி மாமியார் கூறியுள்ளார். ஆனால், டீ எல்லாம் போட்டு தர முடியாது என மருமகள் தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மாமியார் ஃபர்சானா தனது மருமகள் என்று கூட பாராமல் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மருமகள் அஜ்மீரா பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாமியார் ஃபர்சானா பேகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகளை மாமியார் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *