• Sat. May 17th, 2025

கழிவுநீர் கோப்பைகளில் அள்ளி கால்வாயில் ஊற்றும் அவலம்..,

ByKalamegam Viswanathan

May 3, 2025

மதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு ஆதிதிராவிடர் காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் இல்லாததால் பகுதி பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து கிராம சபை கூட்டங்களில் பலமுறை கோரிக்கை வைத்தும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் அதிகாரிகள் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட திருப்பரங்குன்றம் யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்ட பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் கிராமசபை கூட்டத்தை பாதியிலேயே முடித்துவிட்டு கிளம்பிச் சென்றனர்.

தொடர்ந்து அதிகாரிகள் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதனை ஏற்காத பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த 60 வயது முதியவர் தனது வீட்டின் முன்பு கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் இதனால் தினசரி கழிவுநீரை கோப்பையில் அள்ளி கழிவுநீர் கால்வாயில் கொட்டுவதாகவும் அப்போதும் கழிவுநீர் வெளியேறி செல்லாமல் மீண்டும் வீட்டுக்குள்ளேயே கழிவு நீர் வருவதாகவும் கூறினார். ஆதிதிராவிடப் பகுதி மக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் உடனடியாக எங்கள் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் உடனடியாக கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.