• Thu. Mar 28th, 2024

மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை அவமானப்படுத்திய அமைச்சர்..,
கொந்தளிப்பில் எதிர்க்கட்சிகள்..!

Byவிஷா

Jul 30, 2022

பஞ்சாப்பில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மியின் அமைச்சர் ஒருவர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை அவமானப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாபா பரீத் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை மருத்துவமனை படுக்கையில் படுக்கச் சொல்லி அமைச்சர் அவமரியாதை செய்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுகாதாரத்துறை அமைச்சரின் செயலை கண்டித்துள்ளதுடன், ஆம் ஆத்மி இது போன்ற நாடகங்களை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ளது, மாநில முதலமைச்சராக பகவந்த் மான் ஆட்சி செய்து வருகிறார், அவர் முதல்வர் பதவியை ஏற்ற உடனே பொதுமக்கள் அமைச்சர்கள் குறித்த ஊழல் புகார்களை தெரிவிக்கலாம் என்றும், ஒரு வேளை ஊழல் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களது அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதற்காக வாட்ஸ்அப் எண்களையும் அவர் அறிவித்தார். ஊழலற்ற ஆட்சியை நடத்துவதே நோக்கம் என்றும் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அரசு ஒப்பந்தங்களுக்கு கமிஷன் கேட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மீது புகார் எழுந்த நிலையில் அவரது பதவியை பறித்து பகவந்த் மான் நடவடிக்கை எடுத்தார், இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், பாராட்டையும் பெற்றது. இது ஒருபுறம் உள்ள நிலையில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜுரமஜ்ரா அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த பல்கலைக்கழக துணைவேந்தரை மருத்துவமனை மெத்தையில் படுக்க சொல்லி அதிகாரம் செலுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

புதிதாக சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜுரமஜ்ரா,சண்டிகர் ஃபரீத் கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார், அப்போது மருத்துவமனை படுக்கைகள் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது, இதைக்கண்டு கோபமடைந்த அமைச்சர், ஏன் மெத்தைகள் இவ்வளவு அழுக்காக இருக்கிறது என கேள்வி எழுப்பியதுடன், பாபா பரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ராஜ்பகதூரை அழைத்து இதான் நீங்கள் மருத்துவமனையை நிர்வகிக்கும் லட்சணமா? இதில் நோயாளிகள் எப்படி படுப்பார்கள், இதுபோன்ற படுக்கைகளில் நீங்கள் படுப்பீர்களா என சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன்,
துணைவேந்தரை அந்த படுக்கையில் படுக்குமாறு கூறினார், அதனையடுத்து துணைவேந்தர் டாக்டர் ராஜ்பகதூர் அந்த மெத்தையில் படுத்து காண்பித்தார், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, இதை அங்கிருந்தவர்கள் ஊடகங்கள் வீடியோ எடுத்தனர், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, அமைச்சரின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர், ஊடகங்களை அழைத்து சென்று பல்கலைக்கழக துணைவேந்தரை சுகாதாரத்துறை அமைச்சர் அவமானப் படுத்தி இருக்கிறார்,
துணைவேந்தர் இப்படி பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டது மருத்துவ ஊழியர்களின் மன உறுதியைக் குலைத்து விடும், தனது செயலுக்கு அமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தயவுசெய்து ஆம் ஆத்மி கட்சியை இது போன்ற நாடகங்களைக் கைவிட வேண்டும் என கண்டித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *