ஆர்.எஸ்.எஸ். அறிவித்த 50 இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் மனித சங்கிலி நடத்தப்படும் என திருமாவளவன் பேச்சு.
நாமக்கல் பூங்கா சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பின்புசெய்தியாளர்களிடம் பேசும் போது. அக்டோபர் 2-ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிகளோடு அறிவித்த நிலையில் இதையே காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேரணிக்கும் தடை விதித்திருப்பது விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த வெற்றி. சமூக மனித சங்கிலி போராட்டம் அக்டோபர் 2-ல் நடத்தப்படும். அதற்கு உச்சநீதிமன்றத்திலும் டி.ஜி.பி. அலுவலகத்திலும் அனுமதி பெற்று நடத்தப்படும். ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தும் 50 இடங்களில், நாங்களும் மனித சங்கிலி நடத்தினால் சட்ட ஒழுங்கு ஏற்படும் என்ற அச்சம் அரசுக்கு இயல்பாக ஏற்படதான் செய்யும். நாங்கள் அறிவித்த தமிழ்நாடு தழுவிய போராட்டத்திற்கு ஒட்டு மொத்தமாக தடை விதித்திருப்பது சற்று ஏமாற்றத்தை தருகிறது. நாங்கள் 500 இடங்களில் மனித சங்கிலி நடத்த அனுமதி கோரி இருந்தோம். ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த இருந்த 50 இடங்கள் போக, மீதமுள்ள இடங்களில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குனரை கேட்டுக்கொள்கிறோம். ஆர்.எஸ்.எஸ். அறிவித்த 50 இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் மனித சங்கிலி நடத்தப்படும். நமது போராட்டம் ரத்து செய்யப்படவில்லை அனைவரும் போராட்டத்திற்கும் தயாராக இருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.