

சாத்தூரில் சித்ரா பவுர்ணமி நாளன்று கள்ளழகர் வைப்பாற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக விளங்குவது சித்ரா பௌர்ணமி நாளன்று கள்ளழகர் வைப்பாற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சிக்கு சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வர்.

இந்நிகழ்ச்சியின் போது சாத்தூர் வெங்கடாசலபதி திருக்கோவிலில் உள்ள கள்ளழகர் சிறப்பு அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் வீதி உலா வருவார். பின்பு வைப்பாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இந்த ஆண்டு வைப்பாற்றில் கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி வைப்பாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்ற கோசத்துடன் இருகைகூப்பி வணங்கி வழிபட்ட்டனர். ஆற்றில் இறங்கிய வெங்கடாசலபதி சாமிக்கு தீப ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியை சாத்தூர் வெங்கடாசலபதி திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திமுக, அதிமுக, தவேக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், நற்பணி மன்றத்தினர் மற்றும் தன்னர்வலர்கள் என பலர் நீர்மோர் பந்தல் திறந்து பக்தர்கள் தாகம் தீர்த்தனர். மேலும் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. சாமி தரிசனம் செய்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அன்னதானம் வாங்கி உண்டு சென்றனர்.

