திருவிழாக்காலங்களில் அலங்காரமாகப் பவனி வந்து, அனைவருக்கும் ஆசி வழங்கிய யானை, நடைப்பயிற்சிக்கு சென்ற போது, உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரம் பகுதியை சேர்ந்தவர் பாதுஷா இவர் பல வருடமாக லட்சுமி (53)என்ற பெண் யானையை வளர்த்து வந்தார். இந்த யானை தென்காசி மாவட்டம் முழுவதும் கோயில் திருவிழா பள்ளிவாசல் கந்தூரி விழா மற்றும் விசேஷ சுபகாரியங்களுக்கு அலங்காரம் செய்து அழைத்து செல்வது வழக்கம். பல திருமண ஊர்வலங்கள் கோவில் ஊர்வலங்களில் தனது தும்பிக்கையால் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆசி வழங்கி வந்த இந்த யானையை தென்காசி மாவட்டத்தில் பார்க்காதவர்கள் யாருமே இல்லை.
அனைவருக்கும் பரிச்சயமான இந்த யானை நேற்று கடையநல்லூர் அருகே உள்ள மங்களாபுரம் அருகேயுள்ள வேலாயுதபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நடக்க முடியாமல் திணறியது. பின்பு அருகில் உள்ள தோட்டத்தில் மயங்கி விழுந்தது.
யானையின் நிலை அறிந்த பாதுஷா உதவியாளருடன் கடையநல்லூர் வனத்துறை மற்றும் கால்நடை துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறை அதிகாரி சுரேஷ், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அலுவலர் முருகன், மாவட்ட வன பாதுகாவலர் ஷாநவாஸ்கான் மற்றும் திருநெல்வேலி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி துணைத்தலைவர் டாக்டர் முத்துகிருஷ்ணன் நோய் பிரிவு இயல் துறை பேராசிரியர் டாக்டர் குமார் கால்நடை மருத்துவ குழு ஆய்வாளர் அர்னால்டுவினோத் ஆகியோர் நேரில் பார்வையிட்டு யானை இறந்ததை உறுதிப்படுத்தினர்.
பின்பு பிரேதபரிசோதனை நடத்தி அடக்கம் செய்தனர் யானை இறந்த சோகம் தாங்கமுடியாமல் யானைபாகன் பாதுஷா கதறி அழுதது அங்கு கூடியிருந்த பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.