மகாராஷ்டிரா மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் டீ தராத கோபத்தில் ஆபரேஷஷன் தியேட்டரில் இருந்து வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா, வுடா ஆரம்ப சுகாதார மையத்தில் பெண்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்வதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதற்காக ஒரே நாளில் 8 பெண்கள் வந்திருந்தனர். இதற்காக, ராம்டெக் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தெஜ்ரங் பலாவி என்ற மருத்துவர் அழைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, அனைத்துப் பெண்களுக்கும் அனஸ்தீஷியா கொடுக்கப்பட்டு, அவர்கள் ஆபரேஷன் செய்வதற்கு தயார்நிலையில் இருந்தனர்.
உடனே, 4 பெண்களுக்கு ஆபரேஷன் செய்து முடித்தார். அதன்பின், மருத்துவமனை ஊழியரிடம் ஒரு டீ கொண்டு வரும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், அவருக்கு டீ கிடைக்கவில்லை. இதனால் கோபத்தில் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியேறிவிட்டார். மருத்துவமனை ஊழியர்கள் மாவட்ட மருத்துவ அதிகாரியைத் தொடர்புகொண்டு சம்பவத்தை தெரிவித்துள்ளனர். அதனையடுத்து, வேறு ஒரு மருத்துவர் அனுப்பிவைக்கப்பட்டார். இந்நிலையில், இதற்காக 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு டீ கிடைக்கவில்லை என்ற கோபத்தில் மருத்துவர் புறப்பட்டுச் சென்றிருந்தால், அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.