வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த அதிமுக ஆட்சியின்போது எடுக்கப்பட்டது. இந்த முடிவை தற்போது வாபஸ் பெறப்பட்டிருப்பதாக தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள முக்கிய பறவைகள் சரணாலயங்களில் ஒன்று வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். தமிழகத்தின் பழமையான சரணாலயங்களில் வேடந்தாங்கலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கிராம மக்களின் பாதுகாப்பில் 250 ஆண்டு காலமாக பறவைகள் வாழிடமாக இருந்து வருகிறது. இந்த சரணாலயத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றன. சுற்றுலா தலங்களில் ஒன்றான இதன் மூலம் அரசுக்கு வருவாயும் வருகிறது.
இந்தநிலையில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை 5 சதுர கிலோமீட்டரில் இருந்து 3 சதுர கிலோ மீட்டராக குறைப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த அதிமுக ஆட்சியின்போது எடுக்கப்பட்டது. இதற்கு சூழலியாளர்கள், அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய பரப்பளவை குறைக்கும் முடிவு வாபஸ் பெறப்பட்டிருப்பதாக தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி அறிவித்துள்ளார்.