ஒரு வாரத்திற்குள் வாட் வரியை குறைக்கவில்லை என்றால் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என்று பேசிய அரியலூர் பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்ககோரி டிசம்பர் 1ஆம் தேதி பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ள போதிலும் தமிழக அரசு வாட் வரியை குறைக்காததால் அண்டை மாநிலங்கலுக்கு இணையாக தமிழகத்தில் எரிபொருள் விலை குறையவில்லை எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் பாஜக வர்த்தக அணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு அக்கட்சியின் மாவட்ட தலைவர் ஐய்யப்பன், ஒரு வாரத்திற்குள் வாட் வரியை குறைக்கவில்லை என்றால் மாவட்டத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தவும் தயாராக இருக்கிறோம் என்று பேசினார்.இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாவட்ட தலைவர் ஐயப்பன் அரசுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் வகையிலும் அரசை எச்சரிக்கும் வகையில் பேசியதாக வாலாஜாநகர் கிராம நிர்வாக அலுவலர் அரியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து பாஜக மாவட்டத் தலைவர் ஐயப்பனை அரியலூர் போலீசார் கைது செய்தனர்.