இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. 2023-24-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 7-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மார்ச் 6-ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வந்த நிலையில் கடந்த 6-ம் தேதி நிறைவு பெற்றது.
இந்த நிலையில் தற்போது இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதன்படி இந்த தேர்வுக்கு இன்று முதல் வருகிற ஏப்ரல் 13-ம் தேதி இரவு 11.30 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடா, உருது, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்படும். விண்ணப்பிக்கும் போதே, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.