மதுரையில் நாளை மாநகராட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டு திட்டத்தையும் பெருங்குடியில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையையும் முதல்வர் திறந்து வைக்கிறார்
மதுரை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டார்.
ரெயில் நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்காசியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற பின்னர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வருகிறார். சிறிது நேரம் ஓய்வுக்கு பின்னர் காரில் புறப்பட்டு மதுரை வருகிறார். அழகர் கோவில் ரோட்டில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் இரவு தங்குகிறார். நாளை (9-ந் தேதி) காலை 10 மணியளவில் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொன்விழா நினைவு நுழைவாயிலை திறந்து வைக்கிறார். இதை தொடர்ந்து மாநகராட்சி அரங்கில் தமிழகம் முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களுக்கான மேம்பாட்டுத்திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
பின்னர் காரில் புறப்படும் மு.க.ஸ்டாலின் மதுரை விமான நிலைய நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசுகிறார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.