


திமுகவுக்கு பின்னடைவு, தமிழகத்தில் கூட்டாட்சி, 2027ல் முதல்வரே ஜெயிலுக்குபோக வாய்ப்புள்ளது சுந்தரவடிவேல் சுவாமிகள் ஆருடம் கூறி உள்ளார்.
2026 இல் தமிழகத்தில் கூட்டாட்சி ஏற்படும், 2027&க்கு பின் பெரியார் சிலை, அவரது பெயர் எல்லாம் அகற்றப்படக்கூடிய காலம் வரும், காஷ்மீரில் தீவிரவாதிகள் அப்பாவிகளின் உயிரைப் பறித்தது மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கம், 2027ல் முதல்வரே ஜெயிலுக்கு போக வாய்ப்புள்ளது என்று தேனி மகா சக்திபீடம் மடாதிபதி சுந்தரவடிவேல் சுவாமிகள் ஆருடம் கூறி உள்ளார்.
தேனி மாவட்டம் கூடலூர் தம்மணம்பட்டியில் மகா சக்திபீடம் ஆசிரமம் வைத்திருப்பவர் மடாதிபதி சுந்தரவடிவேல் சுவாமிகள். இவர் 2026&ல் தமிழக தேர்தல், காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல் உள்ளிட்டவை குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.


மடாதிபதி சுந்தரவடிவேல் சுவாமிகள் கூறுகையில்..,
தமிழகத்தில் 2026இல் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும். திராவிட மாடல் ஆட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும். திமுக அரசியல் தலைவர்கள் அனைவரின் நாக்கிலும் சனிபகவான் அமர்ந்துகொண்டு பேசிக் கொண்டிருக்கிறார். மதங்களை கொச்சைப்படுத்துவது, மதச்சடங்குகளை கொச்சை படுத்துவது, இந்திய கலாச்சாரத்தில் இழிவு படுத்துவது இவை எல்லாம் திராவிட மாடல் ஆட்சியில் ஒரு மாடலாக வைத்திருக்கிறார்கள். இதனால் இந்த மாடல் ஆட்சி 2026 இல் முடிவுக்கு சென்று விடும்.
2027 ஆம் ஆண்டு முதல்வருக்கு சரி இல்லாத நேரம். ஜெயிலுக்கு செல்லக்கூடிய நிலைகூட ஏற்படும். ராஜா, கனிமொழிக்கு சனிபகவான் உச்சத்தில் இருக்கிறார். அவர்கள் பின்னடைவுக்குச் சென்று இருக்கிற இடம் தெரியாமல் போவார்கள். 2026 இல் தமிழகத்தில் கண்டிப்பாக ஒரு கூட்டாட்சி ஏற்படும், அது தமிழகத்தின் வளர்ச்சியை முன்னோக்கி எடுத்துச் செல்லும் அதில் எந்த மாற்றமும் இல்லை.
பெரியார் பெரிய தியாகிகோ, தேசிய எதிர்காலத்திற்கான பெரிய கல்வியாளருரோ, மருத்துவ ஆராய்ச்சியாளரோ, பெரிய பொருளாதார அறிஞரோ அல்ல. அவர் எதுவுமே செய்யவில்லை. திமுக காரர்கள் தான் அவரை தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். 2027 க்கு பின் ஒரு புரட்சி ஏற்பட்டு பெரியார் சிலை, பெரியாருடைய பெயர் எல்லாம் அகற்றப்படக்கூடிய காலம் வரும்.
பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களின் தலையீடு இருக்கக்கூடாது என்று தமிழக அரசு சொல்கிறது. இது மிகப்பெரிய கொடுமையான நோயாக மாறிவிடும். மத்திய அரசுதான் கல்விக் கொள்கையை வைத்திருக்கிறது. அங்கிருந்து தான் வேந்தர், துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதை தமிழக அரசு கையில் எடுத்துக் கொண்டால் அதில் கட்சியை புகுத்தி கல்வியை நாசம் செய்து விடுவார்கள் ஆகவே மத்தியில் தான் கல்வி கொள்கை இருக்க வேண்டும்.
இந்தியா வல்லரசாக வேண்டும், முன்னேற வேண்டும் என்றால் மத்திய அரசு ஜாதி கணக்கெடுப்பை கைவிட வேண்டும். ஜாதி என்ற ஒரு கூர்மையான ஆயுதத்தை தீட்டி அரசே தேச முன்னேற்றத்தை கெடுத்து விடும். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் இந்த தேசத்தின் சொத்து. அதனால் இவர்களால், இந்த மதத்தினரால் பிரிவினை வந்தது என்று சொல்ல வேண்டாம். காஷ்மீரில் தீவிரவாதிகள் அப்பாவிகளின் உயிரைப் பறித்தது மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கம். 86 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாம் உலகப்போர் நடந்தே தீர வேண்டும், அணுசக்திகள் இந்த உலகில் வெடிக்க வேண்டும் என்பது உண்மை. இது யாராலும் தடுக்க முடியாது நடந்தே தீரும் என்றார்.

சுந்தரவடிவேல் சுவாமிகள் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஒன்பது யானைகளை வைத்து நவகஜ பூஜை உள்ளிட்ட பல யாகங்களை நடத்தியவர், மேலும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு செல்வார் என்றும், மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார் என்றும் ஆருடம் கூறியது குறிப்பிடத்தக்கது.

