மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில், வீட்டின் அருகே கிடந்த பிஸ்கட்டுகளை சாப்பிட்ட சிறுவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் பகுதியில் வசிப்பவர் சின்னாண்டி மகன் குணா, அவரது நண்பருமான செந்தில் மகன் சசிக்குமார் ஆகிய இருவரும் வீட்டின் அருகே கிடந்த காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து சாப்பிட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த பெற்றோர் சிறுவர்களை, அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே குணா உயிரிழந்தார். மற்றொரு சிறுவனான சசிக்குமாருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இரண்டு சிறுவர்களுமே அலங்காநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருவது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.