மது போதைக்கு அடிமையாள இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே 52 வயதான நபர் 210 அடி தூரத்தை 87 நொடிகளில் தலைகீழாக நடந்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சேகர். 52 வயதான இவர் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதோடு கபடி மற்றும் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார். கபடி போட்டிகளில் ஆசிய அளவில் தங்கம் வென்ற இவர் தலைகீழாக நடக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் நீண்ட கால முயற்சியாக இன்று 210 அடி தூரத்தை எண்பத்தி ஏழு நொடிகளில் தலைகீழாக நடந்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
இவரது சாதனைக்கு முன்னாள் இந்திய கபடி அணியின் கேப்டன் அர்ஜுனா விருது பெற்ற ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். இவரது உலக சாதனையை சோழா உலகசாதனை புத்தகம் அங்கீகரித்து சான்று வழங்கியுள்ளது.
தனது உலக சாதனை குறித்து சேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்றைய இளைஞர்கள் மது போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீர்குலைத்து வரும் நிலையில் இளம் வயதிலேயே உலக சாதனை படைக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வும் 52 வயதில் ஒருவரால் உலக சாதனை படைக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தவும் இந்த முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.