• Fri. May 3rd, 2024

தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம் : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Byவிஷா

Apr 20, 2024

உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார்.
ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. இது தமிழர்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாகத் திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தஞ்சை பெரிய கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருவிழா 18 நாட்கள் விமர்சையாக கொண்டாப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் சாமி அலங்காரம் மற்றும் பல்லக்கில் சாமி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை 7 மணி முதல் நான்கு ராஜவீதிகளில் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் திருவிழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *