பழனியில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. பழனி ஊர்க்கோவில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9.30 மணியளவில் கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பழனி நகராட்சி சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களுக்கு நானுற்றுக்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளும், பல்வேறு இடங்களில் தங்குமிடம், மின்சாரம், குடிநீர், கழிவறை, மருத்துவம், உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.