• Fri. Apr 26th, 2024

காட்டுயானை தாக்கி டீக்கடைக்காரர் பலி!

ByA.Tamilselvan

May 28, 2022

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தருமலிங்கம். இவரது மகன் ஆனந்தகுமார்(வயது 43). அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் ஆனந்தகுமார் இன்று காலை 6, 30 மணிக்கு தனது வீட்டில் இருந்து புறப்பட்டு டீக்கடையை திறக்க சென்றார். அப்போது அங்கு வந்த காட்டுயானை, திடீரென அவரை விரட்டியது. உடனே ஆனந்தகுமார் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். எனினும் விரட்டி வந்த காட்டுயானை அவரை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்தகுமார் பரிதாபமாக பலியானார். கிராம இதற்கிடையே ஆனந்தகுமாரின் அலறல் சத்தம் கேட்டு கிராம் மக்கள் திரண்டு வந்தனர். தொடர்ந்து காட்டுயானையை விரட்டியடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நியூஹோப் போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து, ஆனந்தகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்ல முயன்றனர். ஆனால் பேரூராட்சி தலைவர் சித்ராதேவி, துணைத்தலைவர் சகாதேவன் மற்றும் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், கிராம மக்கள் உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூடலூர் ஆர். டி.ஓ. சரவண கண்ணன், கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், பொன் ஜெயசீலன் எம். எல். ஏ., தாசில்தார் சித்தராஜ் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயிர் பலியை ஏற்படுத்தும் காட்டுயானையை கும்கி யானைகள் மூலம் பிடிக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர், கும்கி யானைகள் மூலம் கண்காணிப்பு அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆர். டி. ஓ. சரவண கண்ணன் உறுதி அளித்தார். இதை ஏற்று 10.30 மணிக்கு கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து ஆனந்தகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர். உயிரிழந்த ஆனந்த குமாருக்கு சத்தியவாணி என்ற மனைவியும், நிவேதா, ஐஸ்வர்யா என்ற மகளும், கோகுல் என்ற மகனும் உள்ளனர். ஆனந்தகுமாரை தாக்கி கொன்ற காட்டுயானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் முதுமலையில் இருந்து கும்கி யானைகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு உள்ளது. உயிரிழந்த ஆனந்தகுமாரின் குடும்பத்துக்கு வனத்துறை சார்பில் முதற்கட்டமாக ரூ. 50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. எஸ். எஸ். எல். சி. பொதுத்தேர்வு எழுதிய மகன் காட்டுயானை தாக்கி உயிரிழந்த ஆனந்தகுமாரின் மகன் கோகுல், அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் எஸ். எஸ். எல். சி. படித்து வருகிறார். அவருக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்த நிலையில் கோகுல், இன்று காலையில் அறிவியல் தேர்வு எழுத தயாராகி இருந்தார். இதற்கிடையில் காலை 6.30 மணியளவில் காட்டுயானை தாக்கி தந்தை ஆனந்தகுமார் உயிரிழந்த தகவல் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தார். எனினும் அந்த துக்கத்தை மனதில் புதைத்துக்கொண்டு அறிவியல் தேர்வை பார்வுட் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்துக்கு சென்று எழுதி முடித்தார். அதன்பிறகு வீட்டுக்கு வந்து, தனது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *