• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எடப்பாடியிடம் விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி

ByA.Tamilselvan

Apr 8, 2023

எடப்பாடி பழனிசாமி மீது அரசு மருத்துவக் கல்லூரி கட்டடங்கள் கட்டுவதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் உள்பட 11 மாவட்டங்களில் 4,080 கோடி ரூபாய் செலவில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி அமைக்கப்படவில்லை என்றும், அதில் மிகப்பெரும் அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அப்போது பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக உள்ளதால், இதுகுறித்து மேல் விசாரணை செய்ய அனுமதி அளிக்குமாறு தமிழ்நாடு அரசிடம் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையேற்று, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீதான முறைகேடு புகார் குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த விசாரணையை சிறப்பு புலனாய்வுக்குழு வசம் ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கப்படலாம் என்றும் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்து அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.